அவன் எண்ணங்கள் சிகரம் தொடும் உயரம் செல்லக்கூடியவை !,அவன் எண்ணங்கள் உயரே கிளம்புகிற பெரும்பான்மையான சமயங்களில் மற்றவர்களின் கேலியும்,கிண்டலும் அவன் எண்ணங்களுக்கு உயரத் தடை ஆவதுண்டு ,அவனிடம் பேசுகிறவர்கள் தகாத வார்த்தைகளை சொல்லி ,தாழ்வு மனப்பான்மைக்குள் அவனை தள்ளி விடுகிற சமயங்களிலெல்லாம் அவன் கண்ணீருக்குள் மூழ்கி விடுவதுண்டு ,பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் அவன் கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்த ஒரு ராத்திரியில் கவிதை ஒன்று அவனோடு பேச ஆரம்பித்தது !
♦கனவுகளால் நிறைந்தவனே !
கண்ணீரில் மிதப்பவனே !
கண்ணிருக்கும் கண்ணீரை
துடைத்துவிட்டு வா உடனே !
♦முட்டாள் நீயென்று உலகம் சொன்னவுடன்முட்டாளாய் மாறிவிடும் முட்டாள் நீயில்லை !
சொற்களை நம்பி சோகம் கொள்வதும் ,
வார்த்தைகள் கேட்டு வருத்தம் கொள்வதும்
மடையர்கள் வேலை , மடையன் நீயில்லை !
மேகம் மறைத்தாலும் காகம் பறந்தாலும்
வானம் மாறாது வையத்தில் வீழாது
♦உன்னைப் பார்த்து உலகம் சொல்லும்
இழிமொழி கேட்டு தாழ்ந்து விடாதே!
கனவுகள் கலைக்க கணைகள் தொடுக்கும்
கரங்கள் கண்டு கலங்கி விடாதே !
வானம் போல வாழப் பழகு
புல்நுனி மீது பனித்துளி போல
முள் நுனி மீதும் உறங்கப் பழகு
கட்டி வைத்த கோட்டை தனை
கண்ணீரில் கரைத்திடாதே !
மனம் வரைந்த சித்திரத்தை
அழுதழுது அழித்திடாதே!
♦உன்னை அழவைத்த
உலகம் இதைப்பற்றி
உனக்கு தெரியுமா ?
♦ “அதைசெய் ” “இதைசெய் ” என்று
அறிவுரை ஆயிரம் சொல்லும்
உந்தன் வருத்தம் போக்க
ஆறுதல் வார்த்தை சொல்லும்
வெற்றி பெற வழிகள் சொல்லி
வேறு பாதை உனை திருப்பும் ;
ஆடு நனைய அழுகை கொள்ளும்
அதிசய ஓநாய்க் கூட்டம்
♦யார் மீதும் முழுதாக
நம்பிக்கை கொள்ளாதே!
எவர்பற்றி எவரிடமும்
எப்போதும் சொல்லாதே !
சுவரில்லா சித்திரங்கள்
பார்வைக்கு படுவதில்லை
சுவரை முதலில் கட்டு
சித்திரம் அதன்பின் தீட்டு
♦கனவுகள் கண்ணீரில்
மூழ்கி விடக்கூடாது !
♦கனவை கனலாக்கி
கண்ணீர் காயவை!
உணர்வை உணவாக்கி
கனவை வாழவை !
♦கனவுகளால் நிறைந்தவனே !
கண்ணீரில் மிதப்பவனே !
கண்ணிருக்கும் கண்ணீரை
துடைத்துவிட்டு வா உடனே !
(இந்த உலகத்திற்கு நான் வந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன …!)
-விஜயன்.துரை
கவிதை மிக நன்றாக பேசி இருக்கிறது… வாழ்வில் ஏற்படும் அவமானங்கள் எல்லாம், நமக்கு வெளிச்சம் தரும் விளக்குகள்…
வாழ்த்துக்கள் நண்பா…
arumai nanba romba rasithan unga kavethiya vazuthukal nanba by soba
நல்ல கவிதை. மேலும், தங்களுக்கு இனிவரும் காலம் இன்னும் சிறப்பாக வாழ்த்துகள்.
##உணர்வை உணவாக்கி
கனவை வாழவை ## உற்சாகமூட்டும் வரிகள்…